மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் புன்னகுடா வீதி” என புழக்கத்திலிருந்து வரும் வீதியின் பெயரை ‘எல்விஸ் வல்கம’ வீதி என சிங்கள பேராக மாற்றுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதாயஹம்பத் உத்தரவு பிறப்பித்துள்ளமையானது அப்பிரதேசத்தில் சர்ச்சையை கிளப்பியள்ளது.
ஆளுநரின் உத்தரவு வெளியானதையடுத்து ஏற்கனவே ஏறாவூர் நகரை ஊடறுத்துச் செல்லும் கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் அறிவித்தலாக அமைக்கப்பட்டிருந்த புன்னைகுடா வீதி என்ற பெயர் பலகை அகற்றப்பட்டிருக்கிறது.
இந்த அறிவித்தல் வெளியானதையடுத்து மக்களிடையே பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், தற்போதைய சுற்றாடல் துறை அமைச்சர் நசீர் அஹமட் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், பாரம்பரியமாக புன்னைகுடா வீதியின் பெயர் மாற்றம் பெறாது, பெயர் மாற்ற செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கதோடு இது ஆளுநரின் அதிகார எல்லையை மீறும் செயல்பாடு ஆகும்
இவ்வாறான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதை ஆளுநர் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
கொழும்பு – மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் நகரிலிருந்து சுமார் 5.23 கிலோமீற்றர் தூரத்தில் புன்னைக்குடாக் கடல் அமைந்திருக்கிறது. இது வங்காளக் கடல் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பிருந்தே பூர்வீகமாக இந்த வீதி புன்னைக்குடா வீதி என்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. புன்னை மரங்கள் அங்கு அதிகமிருந்ததால் இது காரணப் பெயராகியுள்ளது.
ஏறாவூர் நகர பிரதேசம் நூறு சத வீதம் முஸ்லிம் சமூகத்தைக் கொண்டமைந்திருந்த போதும் கூட அந்த வீதிக்கு முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவரினதும் பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், திடீரென தென்பகுதி காலிப் பிரதேச சிங்கள சமூகத்தைச் சேர்ந்த 9 பேர் ஆளுநருக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர். அதில் ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்கு “எல்விஸ் வல்கம” என பெயரை மாற்றுமாறு கோரியுள்ளனர்.
அந்த வேண்டுகோளை உடனடியாக அமுல்படுத்தும் நடவடிக்கையில் ஆளுநர் இறங்கி உத்தரவையும் பிறப்பித்துள்ளார்.
காலியைச் சேர்ந்த சிங்கள சமூகத்தவர் அந்த 9 பேரும் விடுத்துள்ள வேண்டுகோளில் “காலி தல்பே கிராமத்தில் பிறந்து தனது 12வது வயதில் ஏறாவூருக்குப் போய்ச் சேர்ந்து அங்கே வர்த்தகம் செய்து நிலபுலன்களையும் வாங்கியதுடன் இன்னும் பல சேவைகளைச் செய்த “எல்விஸ் வல்கம” அவர் காலியின் பெருமைக்குரிய புதல்வனாகும்.
எனவே அவரது பெயரை ஏறாவூர் புன்னைக்குடா வீதிக்குச் சூட்ட உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரைக் கேட்டுக் கொள்கிறோம் என்று எழுதப்பட்டுள்ளது.