முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக செயற்பாட்டாளர்கள் குழுவொன்று உத்தேச பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டம் தொடர்பில் இன்று (07) நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவைச் சந்தித்தது.
இந்தக் குழுவில் கலாநிதி ஜெஹான் பெரேரா, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, கலாநிதி நிமல்கா பெர்ணான்டோ, சட்டத்தரணிகளான அகலங்க, ஜாவிட் யூசுப், சுனில் ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைத்து சிவில் சமூக உறுப்பினர்களும் பயங்கரவாதத்துக் கெதிரான சட்ட வரைவு தொடர்பான தமது விமர்சனங்களை முன்வைத்ததோடு அதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் கருத்து வெளியிட்டனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ,
ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பிலான முன்மொழிவொன்றை முன்வைக்குமாறு குழுவினரை கேட்டுக் கொண்டார்.
பல்வேறு தரப்புக்களில் இருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பியதனால் இந்த வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதை தாம் தாமதப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக இந்தச் சட்டம் பிரயோகிக்கப்படக் கூடும் என்ற விம்பத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன எனத் தெரிவித்த அவர், உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தைக் கையாள்வதற்கான சர்வதேச சட்டங்களை முன்வைத்தே இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இந்தச் சட்டவரைபை தான் ஆதரித்த போதிலும் சிவில் சமூக உறுப்பினர்களின் மாற்றுக் கருத்துக்களைக் கேட்கத் தயாராக இருப்பதாகவும் அவர் இந்தச் சந்திப்பின் போது தெரிவித்தார்.