இஸ்லாமியர்களின் இயல்பான குணம் இதுதான் என நடிகர் ராஜ்கிரண் முகநூல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
தென்னிந்த பிரபல நடிகரான ராஜ்கிரண் 80களின் காலகட்டத்தில் திரைப்பயணத்தில் வெற்றி வாகை சூடிய பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
அவர் படங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. சண்டகோழி படத்தில் முக்கியமான கதாபாத்திரம் மூலம் திரைப்பயணத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார். அதற்கு பின்னர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவரான ராஜ்கிரணின் இயற்பெயர் காதர் . சினிமாவுக்காக தனது பெயரை ராஜ் கிரண் என மாற்றிக் கொண்டார்.
இவர் தற்போது இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், இஸ்லாமிய சமூகத்தின் எதார்த்த குணம் குறித்தும் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
”இஸ்லாமியர்களுக்கு, எவ்வளவு
அநீதிகள் இழைக்கப்பட்டாலும்,
எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும்,
அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு,
தங்களால் முடிந்த உதவிகளை
பிற சமுதாயத்தினருக்கும்
செய்து கொண்டு, அமைதியாக
வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்,
இயலாமையோ, கோழைத்தனமோ,
அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல…
“இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம்.
இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம், என்ற கொள்கையினால்”,
பொறுமை காக்க வேண்டும் என்று,
இறைவனின் இறுதி தூதுவர்,
இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும்
பின்பற்றுவதால்,
பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று, பொறுமை காக்கிறோம்…
இந்தப்பொறுமையை,
தவறாகப்புரிந்து கொண்டு, கண்ட
கழிசடைகளும் பேச ஆரம்பித்தால்,
அதன் விளைவு மிக மோசமாயிருக்கும். “ என தெரிவித்துள்ளார்.