குவைத் நாட்டின் மன்னர் அஷ்ஷெய்க் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வது வயதில் கடந்த சனிக்கிழமை இறையடி சேர்ந்தார்.
இவர் குவைத் நாட்டின் 16 வது மன்னராவார். காலம்சென்ற அஷ்ஷெய்க் அல் அஹமட் அல் ஸபாஹ் அவர்களைத் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஆட்சியை பொறுப்பெடுத்தார்.
1937 ம் ஆண்டு ஜுன் 25ஆம் திகதி குவைத் தலைநகரில் பிறந்த இவர் மன்னர் அஷ்ஷெய்க் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ் அவர்களது 5வது மகனாகும்.
அன்றைய அரச பணிமனையான ‘ தஸ்மான் மாளிகையில் ‘ வளர்ந்த இவர் முபாரகியா பாடசாலையில் கல்வி பயின்றார்.
அரச பணிமனை மன்னர் நவாப் அல் அஹமட் அல் ஜாபிர் அல் ஸபாஹ் அவர்களது மரணத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு சகல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் இரத்து செய்து அல் குர்ஆன் ஓதலை ஒலிபரப்பியது.
திடீர் இருதய நோய்க்குட்பட்ட மன்னர் கடந்த நவம்பர் மாதம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார் .
மன்னர் நவாப் 2006ம் ஆண்டு முடிக்குரிய இளவரசராக முடி சூட்டப்பட்டு 14 வருடங்கள் பதவி வகித்தார் .
அதன்பின்னர் 2020ம் ஆண்டு மன்னர் ஸபாஹ் அல்அஹமட் அல்ஜாபிர் அல் ஸபாஹ் அவர்களது மரணத்தை தொடர்ந்து நாட்டின் மன்னரானார் .
குவைத் நாடு வளைகுடாவில் வடமேல் மூலையில் , ஈராக்கையும் , சவூதியையும் அண்மித்தாக அமைந்துள்ளது . இது மொத்தம் 17818 கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட நாடாகும்.
2020ம் ஆண்டு சர்வதேச மட்டத்தில் நாடுகளின் பொருளாதாரம் இக்கட்டான கட்டத்தில் இருக்கும் போது மன்னர் நவாப் நாட்டின் பொருளாதாரம் சரியாமல் பாதுகாத்தார்.
குவைத் நாடு ஈரான், ஈராக் நாடுகளிற்கு அண்மித்த நாடாக இருப்பதாலும் , வேறு பல காரணங்களினாலும் அவ்வப்போது அரசியல் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியேற்பட்டது. இவரது 03 வருட காலத்தில் பல முறை ஆட்சி மாற்றமும் நடைபெற்றது.
1962 ம் ஆண்டு தொடக்கம் குவைத் நாடு ‘ பாராளுமன்ற அமைப்பை பின்பற்றி செனட் சட்ட சபை ஊடாக நிர்வாக அமைப்பைக் கொண்டு நடாத்துகிறது. குவைத் அரச அமைச்சர்கள் ஆளும் ஸபாஹ் குடும்பத்தினராலேயே நியமனம் பெறுகின்றார்கள்.
குவைத் மக்கள் சபை 50 உறுப்பினர்களைக் கொண்டதாகும் . 04 வருடங்களுக்கு ஒரு முறை மக்கள் வாக்கெடுப்பால் தெரிவு செய்யப்படுகின்றனர். நாட்டினுள்ளே பிரதிநிதித்துவ குழுக்கள் இயங்கலாம். ஆனால் கட்சி அரசியல் அனுமதிக்கப்பட மாட்டாது.
யாப்பின் பிரகாரம் குடும்ப ஆட்சியே அங்கு நடைபெறுகிறது. மன்னருக்கே நிறைவேற்று அதிகாரம் இருக்கிறது. மன்னர் கையொப்பமிட்டால் மாத்திரமே சட்டங்கள் செல்லுபடியாகும். மக்கள் சபையால் எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் மன்னரின் கையொப்பம் பெறப்பட வேண்டும் .
மேலும் உலகில் பலமான எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் குவைத்தும் ஒன்றாகும். வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத் அந்நிய முதலீட்டாளர்களை கவரும் வகையில் பல புதிய சீர்திருத்தங்களை அறிமுகமாக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் தான் உலகத்தை தாக்கிய கொவிட் 19 காலத்திலும் , அதற்கு பிறகும் பொருளாதார , அரசியல் , பாதுகாப்பு ஸ்திரங்களைப் பாதுகாத்து அடுத்த நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தது.
இலங்கையில் குவைத் நாட்டின் தூதரகம் அனுதாப செய்திகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அஷ்ஷெய்க் எம். ஏ.ஏ. நூருள்ளா (நளீமி)
ஆல் ஹிமா இஸ்லாமிய சேவைகள்
இலங்கை