பெலியத்தை துப்பாக்கிச் சூட்டில் 5 பேரைக் கொன்ற சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி மற்றும் தந்தையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பெலியத்தை பிரதேசத்தில் வைத்து ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் தற்போது கடற்படையில் ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் கடற்படை வீரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையில் சில காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாயான இந்தக் கொலையின் பிரதான துப்பாக்கிதாரியின் 39 வயது மனைவி மற்றும் இதற்கு ஆதரவளித்த 72 வயதுடைய தந்தையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாதகம, முத்தரகம பகுதியில் மறைத்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிரதான துப்பாக்கிதாரியான ஓய்வுபெற்ற கடற்படை சிப்பாய் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி பெலியத்த பகுதிக்கு பேருந்தில் சென்று 22ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்திய மேலும் இருவருடன் இந்த கொலைகளை மேற்கொண்டு துபாய்க்கு தப்பிச் சென்றதாகக் கூறியுள்ளார்.
துபாயில் உள்ள நிபுன என்ற நபர் மூலம் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பாதாள உலகக் கும்பல் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரும் தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள ஹர்ஷ என்ற ஹரேந்திர குணதிலக்கவின் வழிகாட்டலில் இந்த படுகொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.