ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 20 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக பொதுத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தாம் ஏற்கனவே பாராளுமன்றத்திற்கும் நிதியமைச்சிற்கும் அறிவித்துள்ளதாக ரத்நாயக்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 2025 இல் முடிவடையும் அதே வேளையில் ஜனாதிபதி தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது.
எனினும் அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கரை வருடங்கள் நிறைவடைந்த பின்னர் எப்போது வேண்டுமானாலும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தை கலைக்க அரசியலமைப்பு ஏற்பாடுகள் உள்ளன.
ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்திய நிலையில், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.