ஈஸ்டர் தாக்குதல் : உண்மைகளை வெளிப்படுத்த ஏன் கால அவகாசம்? சர்வதேச விசாரணை எங்கே

Date:

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் கால அவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்” என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக ஒப்புக் கொண்டிருந்தார்.

விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வினாத் தொடுத்தார்.

நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 05 வருடங்களாகின்ற போதிலும் அரசாங்கம் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுக்கள் தங்கள் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. ஆனால் எதுவித பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

சர்வதேச ஆதரவுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா?

இந்த விடயம் அமைச்சர்கள் சிலருக்கு நகைச்சுவையாக இருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வாறில்லை.

சஹ்ரானுடன் அதிக தடவை தொலைபேசி உரையாடல் மேற்கொண்ட புலனாய்வுத் துறை அதிகாரி யார் என தெரிந்தாலும் மேலதிக விசாரணைகள் இடம்பெறவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே அதிக பயனடைந்தார். அவர் பதவியேற்றதன் பின்னர் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட 31 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தாக்குதல் இடம்பெறவுள்ளதாக இந்திய புலனாய்வு பிரிவால் தகவல்கள் வழங்கப்பட்டன. அத் தகவல்கள் விடுக்கப்பட்ட திகதிகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருக்கின்றார்.

விசாரணைகளின் மூலம் பிரதான சூத்திரதாரி யார் என எப்போது வெளிப்படுத்துவீர்கள். இந்த அனைத்து கேள்விகளுக்கும் இன்றே பதில் தேவைப்படுகிறது.” சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று 5 ஆண்டுகள் கடந்துள்ளன. இன்னும் நீதிநிலைநாட்டப்படவில்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் மேலும் காலஅவகாசம் கோருவது நியாயமற்ற விடயமாகும்.அதற்கு உரிமையும் கிடையாது” இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...