இலங்கையில் தற்போது பாவனையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தை இலத்திரனியல் (Digital) முறைமைக்கு மாற்றப்பட போவதாக அண்மைய காலங்களில் கலந்துரையாடப்பட்டு வந்தாலும், தற்போது அதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சாரதி அனுமதிபத்திரம் அச்சிடும் பிரிவின் பிரதி ஆணையாளர் சுரங்கி பெரேரா தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய முறையின் கீழ் இனிவரும் காலங்களில் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்பத்தை விண்ணப்பிக்க தேவையில்லை. மாறாக இருந்த இடத்தில் இருந்தவாறே பத்திரத்தை புதுபித்தல், காணாமல் போன சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப் பெற்றுக்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை எதிர்காலத்தில் இலத்திரனியல் முறையில் முன்னெடுக்க எதிர்பார்க்கின்றோம்.
மேலும், இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக நேரம் மற்றும் பணத்தை மீதப்படுத்த முடியும். தங்களின் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியில் இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இதற்காகவே பிரத்தியேகமான செயலி (App) ஒன்றும் நடைமுறையில் பரீட்சார்த்த மட்டத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இராணுவத்தினரின் செயற்பாடுகளால் தாமதமடைந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் அடுத்த மாத முடிவில் நிறைவுக்கு வரும். மீதமுள்ள 2 இலட்ச அனுமதி பத்திரங்களும் அச்சிடப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.