ஆயுர்வேத மருத்துவத்துறையில் நியமனங்கள் வழங்கப்படும் போது யுனானி மருத்துவர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுவதாக அரச யுனானி மருத்துவர் சங்கத் தலைவர் டொக்டர் பி. எம். ரிஷாட் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையில் யுனானி வைத்திய முறை, சுதேச மருத்துவ நடைமுறைகள், மற்றும் யுனானி, ஆயுர்வேத மருத்துவர்களின் உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் முன்னேற்றுவதற்கும் மேம்படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்ட அரச யுனானி மருத்துவர் சங்கத்தின் தலைவர் டொக்டர் பீ.எம். ரிஷாட் மேலும் குறிப்பிடுகையில் ,
யுனானி மருத்துவர்களுக்கான ஒரேயொரு போதனா வைத்தியசாலையாக பொரல்ல தேசிய ஆயுர்வேத வைத்தியசாலை மட்டுமே காணப்படுகிறது. இங்கு யுனானி மருத்துவ நிபுணர்களின் (consultants) எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியிருக்கிறது எனவும்
வைத்தியசாலைகளில் யுனானி மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், தேசிய ஆயுர்வேத மருத்துவமனையில் விடுதிகளை (ward) ஒதுக்குவதில் அலட்சியப் போக்கு காணப்படுவதாகவும் 20 கட்டில்களைக் கொண்ட 5 வார்டுகளாவது யுனானி மருத்துவத்துக்காக ஒதுக்க வேண்டியிருக்கிறது எனவும்,
சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேத த் துறைக்கென 2 கற்கை பீடங்கள் (Faculty) காணப்படுவதாகவும், ஆனாலும் 1929 இல் ஆரம்பிக்கப்பட்ட யுனானி மருத்துவத் துறைக்கு சுதேச மருத்துவ பீடத்தில் 2 பிரிவுகள் (department) மாத்திரமே காணப்படுவதாகவும் இதனால் இந்த இரண்டு யுனானி பிரிவுகளையும் இணைத்து ஒரு பீடமாக மாற்றுவதோடு மற்றுமொரு அரச பல்கலைக்கழகத்திலும் புதிதாக கற்கை பீடமொன்று ஆரம்பிக்கப்பட வேண்டியிருக்கிறது எனவும், ஆயுர்வேதப் பிரிவு மற்றும் சுதேச மருத்துவ சுகாதாரத் துறைகளின் கமிட்டிகள், சபைகள் மற்றும் கவுன்சில்களில் யுனானி மருத்துவத் துறை பல சந்தர்ப்பங்களிலும் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் ஆயுர்வேத துறையின் கமிட்டிகளில் யுனானி பிரதிநிதித்துவத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது எனவும் டொக்டர் பீ.எம். ரிஷாட் குறிப்பிட்டுள்ளார்.