புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிப்பதற்கான பயிற்சிகள் நிறைவு!

Date:

சுமார் 25 வருடங்களாக இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்தும் வகையில் தொடர்ச்சியாக தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் “பெப்ரல்” அமைப்பு இம்முறையும் ஜனாதிபதி தேர்தலை மிகச் சிறப்பாக நடாத்துவதற்கு ஒத்துழைக்கும் வகையில் நாடு பூராகவும் உள்ள 25 மாவட்டங்களிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக மிகச்சிறப்பான ஏற்பாடுகளை பூர்த்தி செய்துள்ளது.

அந்தவகையில் புத்தளம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் வகையில் “பெப்ரல்” அமைப்பினூடாக பணியில் ஈடுபடுகின்ற கண்காணிப்பாளர்களுக்கான மற்றுமொரு செயலமர்வு இன்று (16) சிலாபம் கிறிஸ்தவ சேவை மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் வளவாளர்களாக சட்டத்தரணி தினேஷ் பெரேராவும் கள இணைப்பாளராக கடமையாற்றுகின்ற தரிந்து பியுமாலும் கலந்துகொண்டதோடு மாவட்ட “பெப்ரல்” இணைப்பதிகாரி திரு. எம்.சி.எம்.ருமைஷும் கலந்துகொண்டு புத்தளம் மாவட்டத்தில் ஐந்து தேர்தல் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவிருக்கின்ற இருபது கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்கள்.

இச்செயலமர்வில் பிரதான வளவாளராக கலந்துகொண்ட திரு. தினேஷ் , பெப்ரல் அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக தேர்தல் காண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதனூடாக இலங்கையில் ஜனநாயகத்தை, நீதியை, நிலைநாட்டுவதற்காக மேற்கொண்டு வருகின்ற பணிகளை விரிவாக விளக்கியதோடு, இப்பணியை மேற்கொள்வதற்காக ஆரம்ப காலத்திலேயே முழு மூச்சாக ஈடுபட்ட சர்வோதய அமைப்பு, செடக் நிறுவனம் ஆகிய இரு பிரதான தேசிய அமைப்புக்களின் பணிகள் குறித்தும் சிலாகித்து பேசியதோடு, தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் அப்பணியை வெற்றிகரமாக செய்யும் வகையில் ஆற்ற வேண்டிய கடமைகள், பொறுப்புக்கள் குறித்த விரிவான விளக்கங்களையும், தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் அவர் வழங்கினார்.

புத்தளம் மாவட்டத்தில் சிலாபம், நாத்தாண்டி, ஆனமடுவ, வென்னப்புவ, புத்தளம், உள்ளிட்ட 5 தேர்தல் தொகுதிகளுக்குமான பெப்ரல் மூலமாக நியமிக்கப்பட்ட கண்காணிப்பாளர்கள் இச்செயலமர்விலே கலந்துகொண்டு பயிற்சிகளை பெற்றுக்கொண்டு 21ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற இந்நாட்டின் எதிர்கால தலைவரை தீர்மானிக்கின்ற பொறுப்பான பணியை வெற்றிகரமாக நடத்துவதற்கான முழுமையான பங்களிப்பை செய்யும் உறுதியோடு கலைந்து சென்றனர்.

Popular

More like this
Related

ஷானி அபேசேகர பிரதிப் பொலிஸ் மா அதிபராக (DIG) தரமுயர்வு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி...

புத்தளத்தில் ‘அத்தம’ தூய்மை வேலைத்திட்டம் ஆரம்பம்: அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு!

பண்டைய இலங்கையில் நிலவிய பரஸ்பர உதவி மற்றும் கூட்டுப் பொறுப்பை அடிப்படையாகக்...

இலங்கை ஜமாஅதே இஸ்லாமி தலைமையகத்திற்கு பங்களாதேஷ் IIUC பல்கலைக்கழக பிரதிநிதிகள் வருகை!

பங்களாதேஷின் சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (IIUC) பொருளாளர் பேராசிரியர் கலாநிதி மஹ்பூபுர்...