இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஏக்கல சென்ட்குறோப் தோட்டத்திற்கு அண்மித்ததாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமாயுள்ள 10 ஏக்கர் காணியின் 2 ஏக்கர் 2 றூட் காணித்துண்டில் ஏக்கல கைத்தொழில் பேட்டையின் உப மின் நிலையத்தை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அரச பிரதம மதிப்பீட்டாளரின் விலைமதிப்பீட்டுப் பெறுமதியான 320 மில்லியன் ரூபாவிற்கு குறித்த காணித்துண்டை இலங்கை மின்சார சபைக்கு விற்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஏக்கல ஒலிபரப்புக்கூடம் அமைந்துள்ள காணியை 1286 மில்லியன் ரூபாக்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விற்று பெற்ற பணத்தை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை சுயமாக நிதியீட்டும் நிறுவனமாக மீள் கட்டமைப்பதற்குப் பயன்படுத்துவதற்காக முன்னைய அமைச்சரவை கடந்த வருடம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
இந்தத் தொகையில் தற்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள 525 மில்லியன் ரூபாவில் 205 மில்லியன் ரூபாவை கூட்டுத்தாபனத்தின் பணியாளர்களுக்கு நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள சுயமாய் ஒய்வு பெறுவதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எஞ்சியுள்ள 145.72 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நவீன மயமாக்கல் தொடர்பான 25 செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் சமர்ப்பித்த யோசனைக்கும் அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.