இஸ்ரேல் – காசா போர் நிறுத்தம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில் கத்தார் அரசு, அறிவிப்புகள் வரும் வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி போர் தொடங்கியது.
ஹமாஸ் படையினரை குறி வைத்து தொடர்ந்து கடந்த 15 மாதங்களாக காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வந்தது.
இந்த தாக்குதலில் இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். காசா நகரத்தில் உள்ள குடியிருப்புகள் கட்டிடங்கள் என அனைத்தையும் இஸ்ரேல் படைகள் இடித்து தரைமட்டமாகியுள்ளன.
இதனால் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து எல்லை பகுதிகளிலும் அண்டை நாடுகளிலும் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் இஸ்ரேல் காஸா இடையே போர் நிறுத்தத்தை மேற்கொள்ள எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி மேற்கொண்டு வந்தன. இதன் வெளிப்பாடாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இன்று முதல் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி ஹமாஸ் பிடியில் உள்ள இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதே போல் இஸ்ரேல் சிறையில் உள்ள 1800க்கும் மேற்பட்ட கைதிகளும் படிப்படியாக விடுவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் இலங்கை நேரப்படி இன்று பகல் 12:30 மணி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வரவுள்ளது.
முதற்கட்டமாக 6 வாரங்களுக்கு இந்த போர் நிறுத்தம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்று கட்டங்களாக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் இராணுவம் காசாவில் நேற்று நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனிடையே கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் மஜித் அல்-அன்சாரி காசா மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.