கம்பளை, தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் வேனில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விரைவாக நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் தவுலகல பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதோடு, இரு பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவ தினத்தன்று கடமையில் இருந்த மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்தின் பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர், கடுகண்ணாவை பொலிஸ் நிலையத்திற்கும், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட உப பொலிஸ் பரிசோதகர், வேலம்பொடை பொலிஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 19 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் தவுலகல பொலிஸ் பிரிவின் ஹபுகஹயட பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் நடந்தபோது, அந்த இடத்தில் பயணித்ததாக கூறப்படும் கம்பளை பொலிஸில் கடமையாற்றும் அதிகாரி ஒருவர் அது தொடர்பில் தவுலகல பொலிஸின் செயற்பாட்டு அறைக்கு அறிவித்துள்ளார்.
எனினும் கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டில் இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.