பொத்துவிலில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் சபாத் இல்லத்தினை அகற்றுவதற்கான பிரேரணை நிறைவேற்றம்!

Date:

பொத்துவில்-அறுகம்பே பிரதேசத்தில் முஸ்லிம்களின்  பள்ளிவாசலுக்கு அருகில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தொடர்பான பிரச்சினை,  நேற்று (17) அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்ற பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முக்கிய விவாதமாக மாறியது.

இப்பிரேரணை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களினால் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த ‘சபாத் இல்லம்’ எதிர்காலத்தில் சமூக இடைவெளி, மதச்சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு பாதிப்புகளுக்கு வழிவகுக்கும் என்றே அவர் கூறினார்.

பொத்துவில் பகுதியில் அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ தற்போது உயர் பாதுகாப்பு வலயமாக மாறி, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொத்துவில் மக்களின் தகவலின்படி, இந்த இடத்திற்கு பாதுகாப்பு பிரிவினரால் அதிகளவிலான பாதுகாப்பு வழங்கப்படுவதால், மாணவர் சமூகம், மீனவர் சமூகத்தினர், பிரதேசவாசிகள் மற்றும் ஏனைய நாட்டிலிருந்து வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ‘சபாத் இல்லம்’ சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டதா? என்பதை பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபைத் தவிசாளரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் பதிலளிக்கும்போது,

“இது இலங்கையின் கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பொத்துவில் பிரதேசத்தில் அமைப்பதற்கான சட்ட அனுமதி எதுவும் பெறப்படவில்லை” என உறுதிபடுத்தப்பட்டது.

இது பிரதேச சபையின் விதிமுறைகளுக்கும், செயலகத்தின் அனுமதிகளுக்கும் முரணான செயல் என்பதுடன், சட்டத்திற்கு புறம்பானதாகவே பார்க்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொத்துவில் பிரதேசத்தில் அனுமதியில்லாமல் இயங்கிவருவதாக கூறப்படும் இஸ்ரேலின் நிறுவனம் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் பலரும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். அப்துல் வாசித்,

“இந்த அமைப்பு பொத்துவில் மக்களை மட்டுமல்லாமல், இங்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளையும் அச்சத்திற்குள்ளாக்குகிறது. இதனால் அந்நியச் செலாவணியை அதிகரிக்கும் முயற்சிகள் பாதிக்கப்படும். எனவே, உடனடியாக இந்நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.

அத்தோடு இது தொடர்பாக மேல்மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது குறித்து ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற துறைசார் மேற்பார்வை குழுக் கூட்டத்தில் தான் ஏற்கனவே தகவல் வழங்கியதாகவும், அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாதுகாப்புத் தரப்பினர் தனக்கு உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

இவ்விடயம் பொத்துவில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு பரிசீலனைக்குப் பின், சட்ட அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் ‘சபாத் இல்லம்’ உடனடியாக அகற்றப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...