பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், மொன்டானா தேசிய பாதுகாப்புப் படையின் நிறைவேற்றுத் தளபதி பிரிகேடியர் ட்ரெண்டன் கிப்சன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா கையெழுத்திட்டார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் அரச கூட்டுறவின் கீழ், மொன்டானா தேசிய பாதுகாப்புப் படை அமெரிக்க கரையோரக் காவற்படையின் 13 ஆவது பிரிவு மற்றும் இலங்கை ஆயுதப்படைகள் ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
