நைஜீரியாவில் பயங்கரவாத கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 300க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களை விடுவிக்குமாறு புனித பாப்பரசர் லியோ நேற்று (23) கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை இலக்குவைத்து, ஆயுததாரிகள் கடத்திச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில், 300க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் கத்தோலிக்க கிறிஸ்தவ பாடசாலையொன்றினுள் துப்பாக்கிகளுடன் பயங்கரவாத கும்பலொன்று நுழைந்துள்ளது.
அந்த கும்பல் துப்பாக்கிமுனையில் 100க்கு மேற்பட்டோரை கடத்திச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், பின்னர், தொடர்ந்த விசாரணையில் 303 சிறுவர்கள் மற்றும் 12 ஆசிரியர்கள் என 315 பேர் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வத்திக்கானில் உள்ள புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த திருப்பலி ஆராதனையின் நிறைவுவேளையில், புனித பாப்பரசர் லியோ, ஆயுததாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகளை விடுவிக்குமாறு சபை முன்னிலையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கடத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் குறித்து நான் மிகுந்த வேதனையடைகிறேன். பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று நான் மனதார வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் அவர்களை உடனடியாக மீட்பதற்கு அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
