பாகிஸ்தானில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் துணை இராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் பெஷாவரில் அமைந்துள்ளது.
ஃபெடரல் கான்ஸ்டபலரியின் தலைமையகம் வெளியே இன்று தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்ததாக முதல்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
வெடிகுண்டுடன் சென்ற ஒருவர், நுழைவு வாயிலில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிக் குண்டுச் சப்தம் கேட்டு வருகின்றது.
அதிகளவிலான குடியிருப்புப் பகுதி அமைந்துள்ள இடத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள பாதுகாப்புப் படையினர், அப்பகுதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றனர்.
கடந்த சில நாள்களாக பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, செப்டம்பர் மாதம் பலூசிஸ்தானில் உள்ள துணை இராணுவத்தின் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.