கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பேரிடர்களால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
பேரிடர்களால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவிய பாதகமான வானிலையுடன் நடத்த இயலாத கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அறிவித்தார்.
அத்துடன் பாடசாலைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட அளவில் மதிப்பாய்வு செய்து போக்குவரத்து அமைப்பில் ஏற்படும் இடையூறுகள், தொடர்பாடல் சிக்கல்கள் மற்றும் மின் இழப்புகள் போன்ற பேரிடர்களுக்கு ஆளாகாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி தொடங்கப்படும் என்பதுடன், ஏனைய பாடசாலைகள் தொடங்கப்படுவது தொடர்பாக மாகாண மற்றும் மாவட்ட அளவில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு எதிர்வரும் தினங்களில் விலைவான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.
மேலும், பேரிடரால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 08 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்றும், ஏதேனும் நடைமுறை சிக்கல்களை எதிர்நோக்கும் நிறுவனங்கள் இருப்பின், உரிய நிறுவனத்தின் தலைவருக்கு மீண்டும் தொடங்கப்படும் திகதி குறித்து முடிவெடுக்கலாம் எனவும் அவர் கூறினார்.
