பாகிஸ்தான், லாகூரில் உள்ள ஐட்சன் கல்லூரியைச் சேர்ந்த 41 மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (29) கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒரு அறிமுக விஜயத்தை மேற்கொண்டனர்.
டிசம்பர் 23 முதல் 30 வரை கொழும்பில் நடைபெறும் 12 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்த மாணவர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவர் அதிமேதகு மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஃபஹீம் உல் அஜீஸ் மற்றும் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு மாணவர்களுக்குக் கிடைத்தது.
மாணவர்களை அன்புடன் வரவேற்ற தூதுவர், விளையாட்டுத் துறையின் ஊடாக பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் தூதுவர்களாக மாணவர்களின் பங்களிப்பைப் பாராட்டினார்.
மேலும், அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
பாகிஸ்தான் – இலங்கை இடையிலான நீண்டகால நட்பு, பகிரப்பட்ட விழுமியங்கள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு ஆகியவற்றை விளக்கும் விரிவான விளக்கக்காட்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில், இராஜதந்திரம், இரு நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் பரஸ்பர புரிதலை வளர்ப்பதில் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் தூதுவருடன் வெளிப்படையாகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இந்த விஜயம் இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதற்கும், பாகிஸ்தான் மற்றும் இலங்கை மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள தளமாக அமைந்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தியது.

