கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையின் பிரதான நகரங்களில் வளிமண்டலத்தின் தரம் ‘மிதமான’ (Moderate) மட்டத்திலேயே காணப்பட்ட போதிலும், வரும் நாட்களில் சில பகுதிகளில் அது மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) எதிர்வு கூறியுள்ளது.
ஜனவரி 27ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்களின் (PM2.5) அளவு மிதமான மட்டத்தில் இருந்தது. அதேவேளை, வவுனியா, நுவரெலியா, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் ‘நல்ல’ (Good) வளிமண்டலத் தரம் பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் வளிமண்டலத் தரம் ‘மிதமான’ நிலையிலிருந்து ‘ஓரளவு ஆரோக்கியமற்ற’ (Slightly Unhealthy) நிலைக்கு மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு பிராந்தியத்திலிருந்து வீசும் மாசடைந்த காற்று (Transboundary pollution) காரணமாக, அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு நாடு முழுவதும் வளிமண்டலத் தரம் ஆரோக்கியமற்ற நிலைக்குச் செல்லக்கூடும்.
பொதுமக்களை இயலுமானவரை முகக்கவசம் (Face Mask) அணியுமாறு NBRO அறிவுறுத்தியுள்ளது. சுவாசம் தொடர்பான பாதிப்புள்ளவர்கள், ஏதேனும் சிரமங்களை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கோரப்பட்டுள்ளனர்.
