இலங்கையின் முஸ்லிம் கலாசாரத் திருவிழாவான ‘சலாம் ரமழான் 2026’, மேல் மாகாண சபையின் வழிகாட்டலில் கொழும்பு மாநகர சபையுடன் இணைந்து கொழும்பு கிரீன் பாத் வீதியில் மிகவும் கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மத நல்லிணக்கம், கலாசார விழுமியங்கள் மற்றும் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவை மேல் மாகாண ஆளுநர் மற்றும் கொழும்பு மாநகர முதல்வர் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்வின் தொடக்கத்தில், நெலும் பொகுண நுழைவாயிலுக்கு வருகை தந்த கௌரவ ஆளுநர் மற்றும் மாநகர முதல்வர் ஆகியோரை, இலங்கையின் பல்வேறு முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
தொடர்ந்து, சோனகர், மலாய், மேமன் மற்றும் போரா சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் அதிதிகளை மேடைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஊர்வலத்தின் முன்னணியில் (Kali Kolombo) நடனக் குழுவினரின் உற்சாகமான ஆட்டம் விழாவிற்கு மேலும் மெருகூட்டியது. தேசிய கீதம் மற்றும் பாரம்பரிய மங்கல விளக்கேற்றலுடன் விழா முறைப்படி ஆரம்பமானது.
நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய ஏற்பாட்டுக்குழுத் தலைவர், “சலாம் ரமழான் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான விழா மாத்திரமல்ல; இது இனம், மதம் கடந்து அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த அழைப்பாகும். ரமழான் மாதத்தின் அடிப்படைப் பண்புகளான ஈகை, கருணை மற்றும் ஒற்றுமையை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்,” எனத் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர முதல்வர் வ்ராய் கெலி பல்தசார் தனது உரையில், கொழும்பின் பன்முகத்தன்மை மற்றும் கலாசார ஈடுபாட்டை உறுதிப்படுத்த மாநகர சபை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயல்படும் எனத் தெரிவித்தார்.
ஆளுநர் தனது உரையில், சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வலுப்படுத்த இத்தகைய கண்ணியமான மேடையை அமைத்துக் கொடுத்த ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.
120-க்கும் மேற்பட்ட உணவு மற்றும் சில்லறை விற்பனைக்கூடங்கள், கலாசார நிகழ்ச்சிகள், பாரம்பரியக் கண்காட்சிகள். அரபு எழுத்துக்கலை மருதாணி கலை மற்றும் இதர பொழுதுபோக்குகள். சிறுவர்களுக்கென பிரத்யேக விளையாட்டு மண்டலம் மற்றும் தொழுகைக்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் உணவு மரபுகள், கலை வெளிப்பாடுகள் மற்றும் கலாசார பாரம்பரியத்தை ஒரே இடத்தில் பாதுகாப்பான சூழலில் அனுபவிக்க, அனைத்து மக்களையும் அன்புடன் அழைப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

