மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், அரபு நாடுகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களை வீழ்த்தி ஈரான் தனது இராணுவ பலத்தை நிரூபித்து வருகிறது.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தாலும், தனது வறட்டு கௌரவத்திற்காக இஸ்ரேல் உண்மைகளை மறைப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் இந்த மோதலால் நிலைகுலைந்து போயிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கப் படைகள் அரபு நாடுகளின் மண்ணிலிருந்து தாக்குதல் நடத்துவதால், ஈரானின் ஏவுகணைகள் வளைகுடா நகரங்களைக் குறிவைக்கின்றன. இதனால்,
எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியாவைச் சேர்ந்த 90 இலட்சம் பேர் உட்பட லட்சக்கணக்கான வெளிநாட்டினர் அச்சத்தில் உள்ளனர். இந்த பொருளாதாரச் சரிவிலிருந்து மீள இன்னும் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது.
அரபு நாடுகள் அமெரிக்காவின் பிடியிலிருந்து விலகி, தன்னாட்சி பெற்ற பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளின் ‘நேட்டோ’ படையைப் போல, அரபு நாடுகளுக்கென ஒரு கூட்டு இராணுவப் படையை உருவாக்க வேண்டும்.
வளைகுடா மண்ணில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவது அமைதிக்கு வழிவகுக்கும்.
ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் புதிய பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெர்சிய – அரபு இனவாத ஈகோக்களைக் கடந்து, வளைகுடா பிராந்தியத்தின் அமைதிக்காக ஈரானும் அரபு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும். ஏமன், லெபனான், சிரியா போன்ற நாடுகளில் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் ஈரானின் அதிருப்தியைச் சரிசெய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாலஸ்தீன விவகாரத்தில், 70 ஆயிரம் பேரை இஸ்ரேல் கொன்று இருக்கலாம். காசாவை முற்றிலுமாக அழித்திருக்கலாம். ஆனால் அப்போரில் இஸ்ரேலால் வெற்றிப் பெற முடியவில்லை. ஹமாஸ் படையை அவர்களால் அழிக்கவும் முடியவில்லை. கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
இது இஸ்ரேலின் தோல்வியை காட்டுகிறது. தற்போது நான்கு வாரங்களாகியும், ஈரானுடன் அவர்களால் மோதி வெற்றி பெற முடியவில்லை. இது இஸ்ரேலின் இரண்டாவது தோல்வியை காட்டுகிறது.
“அரபு ஆட்சியாளர்கள் தங்கள் அரண்மனை நலன்களை விட, மக்களின் நலன்களையும் பிராந்திய அமைதியையும் முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது” என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
