புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மிகவும் சிக்கலான முள்ளந்தண்டு நேராக்கல் (Scoliosis Correction) சத்திரசிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற இந்த அறுவை சிகிச்சை, பிராந்திய ரீதியான மருத்துவ சேவையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
பொதுவாக இத்தகைய பாரிய சத்திரசிகிச்சைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி போன்ற வரையறுக்கப்பட்ட சில போதனா வைத்தியசாலைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஒரு தள வைத்தியசாலையில் இச்சிகிச்சை இடம்பெற்றது இதுவே முதல் முறையாகும்.
கடந்த சில மாதங்களாக இங்கு முள்ளந்தண்டு தொடர்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தாலும், ‘நேராக்கல்’ சத்திரசிகிச்சை இங்கு முன்னெடுக்கப்பட்டமை இதுவே முதன்முறை.
புத்தளம் தள வைத்தியசாலையின் என்பு முறிவு விசேட வைத்திய நிபுணர் டாக்டர் ஷெஸார் ஹமீத் தலைமையிலான குழுவினர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
இவருக்குப் பக்கபலமாக டாக்டர் உடாய் டி சில்வா (கொழும்பு தேசிய வைத்தியசாலை), டாக்டர் நிர்மல் மரசிங்க (லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலை), டாக்டர் சமிந்த (மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணர்) நிபுணர்களும் இணைந்திருந்தனர்.
தனியார் வைத்தியசாலைகளில் சுமார் 40 இலட்சம் ரூபாவிற்கும் மேல் செலவாகும் இந்த சத்திரசிகிச்சை, அரச வைத்தியசாலையில் ஏழை எளிய மக்களுக்காக முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியானது புத்தளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
எதிர்காலத்திலும் இத்தகைய உயர்தர சிகிச்சைகளை புத்தளம் தள வைத்தியசாலையிலேயே தொடர்ந்து முன்னெடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையிலேயே இவ் வைத்தியசாலை மத்திய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது.
