மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட “5-வது சர்வதேச உம்மா ஒற்றுமை மற்றும் மலாயர் உலக சங்கமம் – 2026” (International Ijtima’ for Ummah Unity & Malay World Gathering) அதன் தலைநகரான குவாலா தெரெங்கானுவில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டின் தொடக்க விழாவில், இலங்கை மலாயர் மாநாட்டின் (Conference of Sri Lankan Malays) தலைவர் டி.கே. அசூர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மலேசியா, இந்தோனேசியா, பட்டாணி (தாய்லாந்து), புருனே மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான பேராளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தில் கல்விசார் கலந்துரையாடல்கள், சமூக நடவடிக்கைகள், கண்காட்சிகள் மற்றும் விற்பனை அரங்குகள் எனப் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் இடம்பெற்றன.
தனது உரையைத் தூய மலாய் மொழியில் ஆற்றிய டி.கே. அசூர், இலங்கையில் வாழும் மலாயர் சமூகத்தின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் தனித்துவமான கலாச்சாரம் குறித்து விளக்கினார்.
அவரது உரையைக் கேட்ட பல வெளிநாட்டுப் பிரதிநிதிகள், “இலங்கையிலும் மலாயர் சமூகம் வாழ்கிறதா?” என வியப்புடன் ஆச்சரியம் தெரிவித்தனர்.
மேலும் தனது உரையின் போது, இலங்கையில் அழிந்து வரும் மலாய் மொழியைப் பாதுகாக்கவும், அதனை மேம்படுத்தவும் சர்வதேச நாடுகள் மற்றும் மலாயர் அமைப்புகள் உதவ வேண்டும் என அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
