எதிர்வரும் மே மாதம் 28ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள ஹஜ் பெருநாளை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட மத வழிபாடுகள் நடைபெறும் பிரதான பள்ளிவாசல்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொது அமைதியைப் பேணுவதற்கும் விசேட போக்குவரத்து திட்டங்கள், நடமாடும் ரோந்துப் பணிகள், துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணிகள் மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 119 மற்றும் 118 ஆகிய அவசர இலக்கங்கள் மூலமாகவோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
