இனவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், வெசாக் வாரம் மற்றும் உழ்ஹிய்யா கடமைகளைச் சமநிலைப்படுத்தும் வகையில் தெளிவான சுற்றுநிருபத்தை வெளியிட்ட அரசாங்கத்திற்கு சமூக நீதிக் கட்சித் தலைவரும், தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான அர்க்கம் முனீர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் அரசாங்கம் மே 27 முதல் ஜூன் 2 வரையான காலப்பகுதியை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தியிருந்தது.
எனினும், அதே வாரத்தில் மே 27 அல்லது 28 ஆம் திகதிகளில் முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் வரவிருந்த நிலையில், உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்கள் எழலாம் என அச்சம் நிலவியது.
இது குறித்து ஏப்ரல் 23 மற்றும் 26 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ அறிக்கை மற்றும் காணொளி ஊடாக அரசாங்கத்தின் கவனத்திற்கு அர்க்கம் முனீர் கொண்டு சென்றிருந்தார்.
குறிப்பாக, ஏப்ரல் 28 ஆம் திகதி பொது நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் பின்வரும் விடயங்கள் வலியுறுத்தப்பட்டன:
-
முழு வாரத்திற்கும் தடை விதிக்காமல், குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் இறைச்சிக்காக மிருகங்களை அறுப்பதைத் தடை செய்தல்.
-
வெசாக் மற்றும் உழ்ஹிய்யா தொடர்பில் தெளிவான வழிகாட்டல்களை வழங்குதல்.
தற்போது பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றுநிருபத்தின்படி, மே 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய திகதிகளில் மாத்திரமே இறைச்சி விற்பனை மற்றும் மிருகங்களை அறுப்பதற்கான தடை அமுலில் இருக்கும்.
இதன் மூலம், ஹஜ் பெருநாள் தினங்களாகக் கருதப்படும் மே 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் முஸ்லிம்கள் எவ்வித சட்டச் சிக்கல்களுமின்றித் தமது உழ்ஹிய்யா கடமைகளை நிறைவேற்ற முடியும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“இனவாத சக்திகளின் கோரிக்கைகளுக்கு அடிபணியாமல், இரு சமூகங்களும் தமது புனித தினங்களைச் சுமூகமாக முன்னெடுப்பதை உறுதி செய்த அரசாங்கத்திற்கு சமூக நீதிக் கட்சி மற்றும் முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றிகளைத் தெரிவிக்கிறேன். இந்தச் சுற்றுநிருபம் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.” எனஅர்க்கம் முனீர் கோரிக்கை விடுத்துள்ளார்.
