காசா பகுதிக்கு ஆதரவாகச் சென்ற சர்வதேச மனிதாபிமான உதவிக் கப்பல் குழுவினர் இஸ்ரேலியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அங்கு கைது செய்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச ஆர்வலர்களை மனிதநேயமற்ற முறையில் நடத்துவது போன்ற வீடியோ காட்சிகளை இஸ்ரேலிய தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் (Itamar Ben-Gvir) தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ பதிவில், அங்குள்ள கைதிகள் மிக மோசமாக நடத்தப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, இலங்கை அரசு தனது ஆழந்த கவலையையும் பலத்த கண்டனத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட சர்வதேச ஆர்வலர்களின் குழுவில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவரும் அடங்கியுள்ளார்.
இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“இஸ்ரேலிய அமைச்சர் இதாமர் பென்-க்வீரினால் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில், சர்வதேச உதவிக்கப்பல் குழுவினர் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து இலங்கை அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையையும் கடுமையான வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது.
இதில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜைக்கு உடனடியாக தூதரக ரீதியிலான பாதுகாப்பை (Consular Access) உறுதி செய்யவும், அவரது பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் கண்ணியத்திற்கு உத்தரவாதம் பெறவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சுடன் இராஜதந்திர வழிகளில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது.”
பாதிக்கப்பட்ட இலங்கையரை எவ்வித ஆபத்துகளும் இன்றி, மிக விரைவாகவும் பாதுகாப்பாகவும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.
வெளிநாடுகளில் வாழும் மற்றும் பணிபுரியும் தங்களது நாட்டு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இலங்கை அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
