வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு!

Date:

எதிர்வரும் 2026 மே 30 அன்று மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள வெசாக் புண்ணிய தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை அமல்படுத்த இலங்கை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் எவ்வித அச்சமும் இடையூறுமின்றி மத வழிபாடுகளில் ஈடுபடுவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.

வெசாக் வாரம் முழுவதும் புனித பௌத்த தலங்கள், தோரணங்கள் , வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்படும் இடங்கள் மற்றும் பக்திகீத நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் பகல் மற்றும் இரவு நேர விசேட ரோந்துப் பணிகள் பலப்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட அறிவுறுத்தல்களை பொலிஸ் மா அதிபர் (IGP) அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்கியுள்ளார்.

வெசாக் பண்டிகையின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் வகையில் அல்லது பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பொலிஸார், பொதுமக்கள் பின்பற்றுவதற்காக பின்வரும் முக்கிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளனர்:

  • ‘ஒலுபக்கன்’ (Olubakkan) நடனங்களில் ஈடுபடுவது, முகமூடிகள் அணிவது, வெசாக் பண்டிகையின் புனிதத்தை சீர்குலைக்கும் ஆபாசமான அல்லது பொருத்தமற்ற ஆடைகளை அணிந்து அநாகரிகமாக நடந்துகொள்வது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

  • பொது இடங்களிலோ, தோரணங்கள் அல்லது தன்சல் (Dansal) அன்னதான நிகழ்வுகள் நடைபெறும் இடங்களிலோ பிறருக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உரத்த சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பக் கூடாது. ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முறையான சட்டபூர்வ அனுமதி பெறப்பட வேண்டும்.

  • வெசாக் நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் மதுபானம் அல்லது ஏனைய போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • தன்சல் ஏற்பாட்டாளர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும். அத்துடன், தன்சல் வழங்கப்படும் இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு மக்கள் கூட்டத்தை முறையாகக் கையாள வேண்டும்.

  • வீதியின் இருபுறமும் போக்குவரத்து ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • கழிவுகளை கண்ட இடங்களில் வீசாமல், பொறுப்புடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நெரிசலான இடங்களில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும். அத்துடன், திருட்டுப் போவதைத் தவிர்க்க உங்களது பெறுமதியான உடமைகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

பொலிஸாரைத் தொடர்பு கொள்வதற்கான அவசர எண்கள்: வீதி விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், விபத்துகள் தொடர்பான வீடியோ பதிவுகளை 070-4755600 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) எண்ணிற்கு உடனடியாக அனுப்பலாம். அதிக புகை வெளியிடும் வாகனங்கள் குறித்து 070-3500525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

மேலும், ஏதேனும் அவசர உதவி தேவைப்படின் 118 அல்லது 119 ஆகிய அவசர அழைப்பு எண்கள் மூலம் இலங்கை பொலிஸாரைத் தொடர்பு கொள்ள முடியும்.

Popular

More like this
Related

நீர்கொழும்பு சிறை மோதல்: விசாரணைக்கு குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக முறையான மற்றும் விரிவான...

தேர்தல் சட்ட மறுஆய்வு: அனைத்துத் தரப்பினரும் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்க அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் முன்னணிகள் சங்கம் வேண்டுகோள்!

இலங்கையின் எதிர்காலத் தேர்தல் முறைமை மற்றும் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை...

இஸ்ரேலிய சிறைகளில் பாலஸ்தீன மருத்துவர்களுக்குக் கொடூர சித்திரவதை: உயிருக்குக் கடும் ஆபத்து என மனித உரிமை அமைப்புகள் எச்சரிக்கை!

இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மருத்துவர்களான ஹுசாம் அபு சபியா (Hussam...