இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து வரும் நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு, அதன் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த மீளாய்வுகளை எதிர்வரும் புதன்கிழமை (27) பரிசீலிக்கவுள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ (Evan Papageorgiou) தெரிவிக்கையில், கடந்த ஆண்டுகளில் இலங்கை ஸ்திரமான பொருளாதார நிலையை மீட்டெடுப்பதிலும், கையிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதிலும், நம்பிக்கையை வலுப்படுத்துவதிலும் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகக் கூறினார்.
இந்த முயற்சிகள் பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருளாதாரத்தை மிகவும் உறுதியான அடித்தளத்தில் நிலைநிறுத்த உதவியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
