இலங்கையின் வடகிழக்கில் அமைந்துள்ள குறைந்த காற்றழுத்தப் பகுதி, நாட்டின் கடற்பகுதியில் தொடர்ந்து நீடித்து வருவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் இத்தொகுதியின் நடத்தை, வளர்ச்சி மற்றும் பாதையைத் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ. அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
அநுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுகின்றது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று நிலைமையும் மழை நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப் படுகின்றது. கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, புத்தளம், மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
