வெசாக் பண்டிகை தொடர்பான இறுதி ஆலோசனைக் கூட்டம் நேற்று (20) அலரி மாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முக்கியமாக ‘புத்த ரஷ்மி’ விசாக வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் விசாக வலயக் காலப்பகுதியில் எரிசக்தி பயன்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், வெசாக் வலயப் பணிகளை வெற்றிகரமாக ஒழுங்கமைக்கவும் ஒருங்கிணைக்கவும் நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளின் விபரங்களும் இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்டன.
தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சார செலவில், கொள்கை வழிபாட்டிற்கு முன்னுரிமை அளித்து, ஆமிச வழிபாட்டின் மூலம் பௌத்தர்களின் மனதை மகிழ்விக்கும் வகையில் ‘புத்த ரஷ்மி’ விசாக வலயத்தை அலங்கரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை வெசாக் வலயம் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடத்தப்படும் என கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிரிந்தே அஸ்ஸஜி தேரர், முப்படைகளின் பிரதிநிதிகள், இலங்கை பொலிஸார், சிவில் பாதுகாப்பு திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
