விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இலாகாக்கள் இதுவரை யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
இந்த துறைகள் விசிக, ஐ.யூ.எம்.எல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவை விரிவாக்கம், அமைச்சு மாற்றங்கள் எனத் தமிழக அரசியல் களம் தினமும் ஒரு அதிரடியைச் சந்தித்து வருகிறது.
அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டது. அதன்படி, முன்பு நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட செங்கோட்டையன் அத்துறையில் இருந்து மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக மரிய வில்சனுக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஒட்டுமொத்த அமைச்சுக்கள் ஒதுக்கீட்டிலும் அரசியல் நோக்கர்கள் கவனித்த ஒரு மிக முக்கியமான விஷயம், ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய இரு முக்கிய துறைகள் தற்போதைய அமைச்சரவையில் யாருக்கும் ஒதுக்கப்படாமல், இன்னும் வெற்றிடமாகவே வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மிகப்பெரிய வாக்கு வங்கியாகவும், சமூக நீதியின் அடையாளமாகவும் திகழ்பவர்கள் பட்டியலின மக்களும், சிறுபான்மையின (இஸ்லாமிய, கிறிஸ்தவ) மக்களும் ஆவர்.
அவர்களின் மேம்பாட்டுக்கான 2 துறைகளும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்குபெறும் என காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
அந்தக் கட்சிக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல் விசிக இணைந்தால் அவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
ஆதி திராவிடர் நலத்துறை: கல்வி, விடுதிகள், மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான பெரிய பட்ஜெட்டைக் கொண்ட ஒரு துறை.
சிறுபான்மையினர் நலத்துறை: சிறுபான்மையின மக்களின் கல்வி, வக்ஃப் வாரியம், மற்றும் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் துறை. இந்த இரு முக்கியத் துறைகளையும் தன் சொந்தக் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு ஒதுக்காமல் விஜய் நிறுத்தி வைத்திருப்பது, தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகளைத் தூண்டிவிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் மிக முக்கியமான சக்தியாக விளங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), தேர்தலுக்கு முன்னதாகவே “ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு” என்ற முழக்கத்தை மிகத் தீவிரமாக முன்வைத்து வந்தது.
விசிக-வின் இந்த “அதிகாரப் பகிர்வு” குரலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த விஜய் திட்டமிடுகிறார்.
விசிகவை அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய அழைப்பு விடுத்துள்ளார் விஜய். அக்கட்சியும் ஆலோசித்து முடிவெடுப்பதாகக் கூறியுள்ளது.
இதுவரை திமுக கூட்டணியில் இருப்பதாகச் சொல்லி வரும் விசிக, அமைச்சரவையில் இணைந்துவிட்டால் அப்படித் தொடர்வதில் நியாயமில்லை.
விசிக தவெக-வின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டால், அது வடதமிழகம் மற்றும் மத்திய தமிழகத்தில் திமுகவின் வாக்கு வங்கியை மோசமாகச் சிதைக்கும்.
விசிக, விரைவில் விஜய்யின் அமைச்சரவையில் இடம்பெறும். அக்கட்சியின் சார்பில் வன்னி அரசு அமைச்சர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காகவே ஆதி திராவிடர் நலத்துறை தற்போதைக்குத் தவெக அமைச்சரவையில் வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளதாகப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஐ.யூ.எம்.எல்-க்கு சிறுபான்மையினர் நலத்துறை? தேர்தல் பிரச்சாரக் காலங்களில், தவெக-வின் கொள்கைகள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து திமுக தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
இதற்குப் பதில் சொல்லும் விதமாகத்தான் தற்போதைய நகர்வு பார்க்கப்படுகிறது. பாரம்பரியமிக்க சிறுபான்மையினக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிக்கு இந்த ‘சிறுபான்மையினர் நலத்துறை’ அமைச்சகத்தை ஒதுக்க விஜய் தயாராக இருக்கிறார்.
இதன் மூலம், தவெக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி அல்ல, மாறாக அவர்களுக்கு ஆட்சியில் நேரடி அதிகாரம் வழங்கும் கட்சி என்ற இமேஜை விஜய் கட்டமைக்க முயல்கிறார்.
தவெக மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கையை அதிகரித்து, மதச்சார்பற்ற இமேஜைப் பலப்படுத்துவது தான் விஜய்யின் திட்டம் என்கிறார்கள்.
விஜய் பிளான் தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பங்குபெறும் என காதர் மொய்தீன் அறிவித்துள்ளார்.
அந்தக் கட்சியின் சார்பாக பாபநாசம் எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராக உள்ளார். அவருக்கு சிறுபான்மையினர் நலத்துறை ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.
சிறுபான்மையினர் மற்றும் பட்டியலின மக்களுக்கு அங்கீகாரம் கொடுத்த கட்சி என்ற பெயரைப் பெறுவதோடு, எதிர்வரும் தேர்தல்களிலும் இந்தக் கட்சிகளை கூட்டணியில் தக்க வைக்கலாம் என விஜய் கணக்குப் போட்டிருப்பதாகத் தெரிகிறது.
