இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை சுமார் 40 இலட்சம் பேர் அதனைப் பெற்றுக்கொள்ளவில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது 13 மில்லியனுக்கும் அதிகமானோர் TIN இலக்கத்தை பெற்றுள்ளதாகவும், 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் மொத்தம் சுமார் 17 மில்லியன் பேர் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
2026ஆம் ஆண்டின் உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டத்தின்படி, பொதுமக்களின் அன்றாட மற்றும் வணிக ரீதியான பல முக்கிய நடவடிக்கைகளுக்கு TIN இலக்கம் இனி முற்றிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பின்வரும் சேவைகளைப் பெற TIN அவசியம்:
-
புதிய வங்கி கணக்குகளைத் திறத்தல் (Bank Account Opening)
-
வாகனப் பதிவு நடவடிக்கைகள் (Vehicle Registration)
-
வணிக நிறுவனங்களைப் பதிவு செய்தல் (Business Registration)
-
பங்கு பரிமாற்ற நடவடிக்கைகள் (Stock Exchange Transactions)
-
புதிய கடன் அட்டைகளைப் (Credit Card) பெற்றுக்கொள்ளுதல்
TIN இலக்க நடைமுறை குறித்து தெளிவுபடுத்தியுள்ள உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பல்வேறு பொது மற்றும் தனியார் துறை சேவைகளுக்கு இந்த இலக்கம் பரவலாகப் பயன்படுத்தப்படவுள்ளதால், இனிமேல் TIN இலக்கமானது ஒரு இரகசியத் தகவலாகக் கருதப்படமாட்டாது என்றும் அறிவித்துள்ளது.
எனவே, 18 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை TIN இலக்கத்தைப் பெறாதவர்கள், சட்ட சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் தடையற்ற சேவைகளைப் பெறுவதற்கும் உடனடியாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
