அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் (ACJU) பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூரமித் சம்பந்தப்பட்ட அண்மைக்கால உணர்வுப்பூர்வமான விவகாரம் சுமுகமான முறையில் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
‘கொழும்பு டைம்ஸ்’ஊடகம் எழுப்பிய கேள்விக்கு நேற்று (மே 31) பதிலளிக்கும் போதே அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அருண் ஹேமச்சந்திர வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச்செயலாளர் அஷ்-ஷைக் அர்கம் நூரமித் தொடர்பான அண்மைக்கால விவகாரம், சாதகமான மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் தீர்க்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த விவகாரத்தை அமைதியான மற்றும் மரியாதைக்குரிய முறையில் சுமுக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சவூதி அரேபிய அரசாங்கம் காட்டிய புரிதலுக்கும் வழங்கிய ஒத்துழைப்புக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இந்த உணர்வுப்பூர்வமான சூழ்நிலையின் போது பொறுப்புணர்வுடனும், பொறுமையுடனும், விவேகத்துடனும் செயற்பட்ட அனைவருக்கும் எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கையும் சவூதி அரேபியாவும் பரஸ்பர மரியாதை, நட்பு, மத ரீதியான பிணைப்புகள் மற்றும் இரு நாட்டு மக்களுக்கிடையிலான ஆழமான தொடர்புகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட நீண்டகால உறவைக் கொண்டுள்ளன.
இதுபோன்ற தருணங்களில், கலந்துரையாடல், இராஜதந்திரம் மற்றும் பரஸ்பர புரிதல் ஆகியவற்றின் ஊடாகவே விடயங்களை கையாள்வது முக்கியமாகும்.
வெளிநாடுகளில் வாழும் அனைத்து இலங்கையர்களின் கண்ணியம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் அதேவேளையில், இலங்கைக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையிலான நட்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.”
சவூதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது, அங்குள்ள சட்டதிட்டங்களை மீறியதாகக் கூறி சவூதி பாதுகாப்புப் பிரிவினரால் அஷ்-ஷைக் அர்கம் நூரமித் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர முயற்சிகள் மூலம் இந்த விவகாரம் தற்போது சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
