லங்கா உப்பு நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளர் ரத்நாயக்க முதியன்சலாகே குணரத்ன, இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முறையான கொள்முதல் செயன்முறைகளைப் பின்பற்றாது, மேற்கொள்ளப்பட்ட மீள் கொள்வனவு ஒன்றின் ஊடாக ஹம்பாந்தோட்டை உப்பு நிறுவனத்திற்கு பொதியிடல் உறைகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம், அரசாங்கத்திற்கு சுமார் ஒரு கோடியே நாற்பத்து மூன்று இலட்சம் (14.3 மில்லியன்) ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான கொள்முதல் நடவடிக்கை காரணமாக, பிரதான விநியோகஸ்தர் நிறுவனம் ஒன்று அநியாயமான முறையில் பெரும் இலாபம் ஈட்டுவதற்கு இவர் வழிவகுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு, லங்கா உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளரைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளது.
