புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த, 1448-வது ஹிஜ்ரி புத்தாண்டை முன்னிட்டு “ஹிஜ்ரத் புத்தாண்டு கற்றுத்தரும் பாடங்களை மீட்டல்” எனும் விசேட நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் பாடசாலை வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் சனுஸ் முகம்மத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விசேட பேச்சாளராக ‘பஹன மீடியாவின் பணிப்பாளரும், புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவருமான அஷ்ஷேக் அப்துல் முஜீப் சாலிஹ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில்,
“ஹிஜ்ரி புத்தாண்டு என்பது முஸ்லிம்களின் வாழ்க்கையில் எந்தளவு தூரம் முக்கியமானது என்பதனையும், அதன் முக்கியத்துவத்தைக் கருதியே பாடசாலை மாணவர்கள் மத்தியில் இதனை நினைவூட்டக்கூடிய நிகழ்வுகளை கல்வி அமைச்சு வருடாந்தம் ஏற்பாடு செய்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், இந்த ஹிஜ்ரி புத்தாண்டு என்பது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் புனித பயணமான, மக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற அந்த ஹிஜ்ரத் பயணத்தை நினைவுகூருகின்ற ஒரு வரலாற்று நிகழ்வாக இருக்கிறது. எனவே, அந்த வரலாற்று நிகழ்வு தருகின்ற தியாகம், பொறுமை, தனித்துவத்தைப் பாதுகாத்தல் போன்ற இன்னும் பல பாடங்கள் பற்றிய நடைமுறை உதாரணங்களோடு அவர் தனது உரையை நிகழ்த்தினார்.
இதேவேளை, பாடசாலை அதிபர் தனது வரவேற்புரையில், முஹர்ரம் மாதத்தின் சிறப்பைப் பற்றி குறிப்பிட்டதோடு, முஹர்ரம் மாதத்திலே முக்கியமாக நோற்கப்படுகின்ற ‘ஆஷூரா’ நோன்பு சம்பந்தமாகவும், அந்த நோன்பை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையிலே மாணவர்கள் மத்தியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதனையும் நினைவூட்டினார்.
இந்நிகழ்வின் மற்றொரு முக்கிய அம்சமாக, கடந்த ரமழான் மாதத்தில் பாடசாலை மட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அல்-குர்ஆன் மனனப் போட்டியில் பரிசில்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுச் சின்னங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

