சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள பத்தா (Batha) பகுதியில், ஷேக் அப்துல் ஹஸன் மதனி எழுதிய “உலக மொழிகளில் அறபு மொழியின் சிறப்பும் தனித்துவமும்” என்ற தமிழ் நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வத் நூலினை வெளியீட்டு வைத்தார்.
இந்த விழாவில், சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் , இன்றைய நவீன உலகில் அரபு மொழியின் பயன்பாடு எவ்வாறு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, அரபு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், அரபு பேசும் திறனை (Spoken Arabic) வளர்க்கும் கற்றல் கருவிகளை உருவாக்குவதும், அது சார்ந்த நூல்களை வெளியிடுவதும் மிக அவசியமானது.
அரபு மொழி என்பது உலகளவில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மிக முக்கியமான மொழிகளில் ஒன்றாகும். இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது புனித அல்குர்ஆனின் மொழியாக தனித்துவமிக்க ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், சர்வதேச ராஜதந்திரம், உலகளாவிய வர்த்தகம் மற்றும் வணிகம் ஆகியவற்றில் முக்கிய ஊடகமாகவும் திகழ்கிறது.
ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய தகவல் தொடர்புகளில் அரபு மொழியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ள இன்றைய உலக சூழலில், அரபு மொழியைக் கற்றுக்கொள்வது உலகின் மிகவும் செல்வாக்குமிக்க ஒரு பிராந்தியத்திற்கும் அதன் நாகரிகத்திற்கும் வழிவகுக்கும் ஒரு சிறந்த நுழைவாயிலாக அமையும்.
மனிதகுலத்திற்கு அரபு மொழி ஆற்றியுள்ள மொழி, கலாச்சாரம் மற்றும் நாகரிக பங்களிப்புகளைக் கொண்டாடும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ மொழியாக அரபு மொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட டிசம்பர் 18 (1973) ஆம் நாளை நினைவு கூர்ந்து ஆண்டுதோறும் டிசம்பர் 18 ஆம் தேதியை “உலக அரபு மொழி தினமாக” யுனெஸ்கோ (UNESCO) கடந்த 2010 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

