இலங்கையில் பௌத்த மகா சங்கத்தினர் (துறவிகள்) சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள், பொதுமக்கள் மற்றும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மதத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.
எனவே, பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விசேட வீடியோ அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்,
பௌத்த துறவிகள் சம்பந்தமாக அண்மைக் காலமாக வெளியாகி வரும் செய்திகள், நாட்டின் மீது பற்றுள்ள பலரையும் ஆழ்ந்த கவலையில் ஆழ்த்தியுள்ளதாக சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். போதைப்பொருள் விவகாரங்களில் பௌத்த துறவிகள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மற்றும் எட்டு முக்கிய பௌத்த விகாரைகளின் தலைமைத் தேரர் ஒருவர், சிறுமி ஒருவரை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்துள்ள அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சம்பவங்கள் பல பௌத்தர்களின் நம்பிக்கையை உலுக்கியுள்ளதாக எச்சரித்த அவர், மத நிறுவனங்கள் மீதான நம்பிக்கை இழப்பு, சமூகத்தில்—குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில்—பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
இந்த விவகாரம் இவ்வளவு தீவிரமடைந்திருந்த போதிலும், நாட்டின் அரசியல் தலைவர்கள் இது குறித்து பெருமளவில் மௌனம் காத்து வருவது தனக்கு ஏமாற்றமளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
பௌத்த துறவிகள் மத்தியில் அவசர சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கு தலைமை தாங்குமாறு கோரி, தான் பௌத்த மகாநாயக்க தேரர்களுக்கு (மூத்த மதத் தலைவர்கள்) கடிதம் எழுதியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்மொழிவுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகக் கூறிய அவர், சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக மூத்த துறவிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பிற மதத் தலைவர்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைக்குமாறு யோசனை தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்படும் சீர்திருத்தப் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார். பௌத்த சாசனத்தைப் பாதுகாப்பதற்கும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் வலுவான சட்ட வழிமுறைகள் அவசியம் என்றும் அவர் கூறினார்.
தவறுகள் மற்றும் அநீதிகளுக்கு எதிராக பொதுமக்கள் மௌனமாக இருக்கக் கூடாது என அழைப்பு விடுத்த சந்திரிகா குமாரதுங்க, மத நிறுவனங்களைப் பாதுகாப்பது தலைவர்கள் மற்றும் குடிமக்கள் இருசாராரின் கூட்டுப் பொறுப்பாகும் என்றும் தனது உரையில் வலியுறுத்தினார்.
