கடந்த 24 மணி நேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
டெங்கு பரவலில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர். தற்போது நாளொன்றுக்கு 700 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரத்தில் டெங்கு நோய் ஒரு தொற்றுநோயாக மாறி, நாளொன்றுக்கு 1000 க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவான சந்தர்ப்பங்களும் காணப்பட்டதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 12,196 ஆகும். இதன் அடிப்படையில், இந்த ஆண்டின் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்திலேயே பதிவாகியுள்ளனர்.
டெங்கு பரவல் அதிகமுள்ள அதி-அவதான சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சில மருத்துவமனைகளின் வார்டுகள் டெங்கு நோயாளர்களினால் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரத்தின் ஊடாக தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், வரும் நாட்களில் நோயாளர்களின் எண்ணிக்கை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தத்தமது வீட்டு வளாகங்களையும் சுற்றாடலையும் கொசுக்கள் போகா வண்ணம் சுத்தமாக வைத்திருப்பது அனைவரினதும் பொறுப்பாகும் என சுகாதாரப் பிரிவினர் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.
