பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்காக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
Abhinava Niwahal Peramuna தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று (02) நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மனுவை விசாரணைக்கு எடுப்பதற்காக மிக நெருக்கமான திகதி ஒன்றினை வழங்குமாறு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனாவின் சட்டத்தரணியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
இதன்படி, குறித்த மனு மீதான விசாரணையை ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிடப்பட்டது.
ராமநாதன் அர்ஜுனா பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியிலும் அவர் அரசாங்க வைத்தியராகப் பணியாற்றி வந்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம் இது சட்டவிரோதமானது என மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
