மஹிந்த ராஜபக்சவின் வீராக்கெட்டிய இல்லத்தில் ரூ. 26.8 லட்சம் மின் கட்டண நிலுவை இருந்தபோது மின்சாரத்தைத் துண்டிக்காத இலங்கை மின்சார சபை, சாமானிய நபர் ஒருவரின் வீட்டில் வெறும் ரூ. 7,390 நிலுவைக்காக உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தது நியாயமா எனக் கேள்வி எழுப்பி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமண விழாவிற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தைச் செலுத்தத் தவறியமை தொடர்பிலேயே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சாமானியனின் மின்சாரத்தை உடனடியாகத் துண்டித்துவிட்டு, லட்சக்கணக்கான ரூபாய் நிலுவை வைத்திருந்த சக்திவாய்ந்த அரசியல்வாதிகளின் வீட்டின் மின்சாரத்தைத் துண்டிக்கத் தவறியது “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற அரசியலமைப்பு உரிமையை மீறும் செயலாகும் என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரப்பட்ட இந்த மனுவை, எதிர்வரும் டிசம்பர் 04-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் (24) உத்தரவிட்டுள்ளது.
