கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் கடுமையான நெருக்கடி நிலவிய போதிலும், குழந்தைகளுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சிகிச்சைக்காகவோ அல்லது வழக்கமான மருத்துவமனை கிளினிக் வருகைகளுக்காகவோ குழந்தைகளை அழைத்து வரும்போது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பின்வரும் 5 ஆவணங்களையும் தவறாமல் எடுத்து வருமாறு மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது:
-
தனிநபர் சுகாதார எண் (PHN) அல்லது பார்கோடு அட்டை (Barcode Card)
-
குழந்தை சுகாதார வளர்ச்சிப் பதிவு புத்தகம் (CHDR) அல்லது எடைப் பதிவு புத்தகம்
-
ஏதேனும் மருந்துகள் அல்லது உணவு ஒவ்வாமை (Allergies) பற்றிய பதிவுகள்
-
மருத்துவமனை கிளினிக் புத்தகங்கள் (Clinic Books)
-
மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அட்டைகள் (Discharge Cards) அல்லது நோய் கண்டறிதல் அட்டைகள் (Diagnosis Cards)
பொதுமக்கள் அனைவரும் இக்கட்டான இந்தச் சூழலில் மருத்துவமனைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற, 011 2693711 என்ற தொலைபேசி எண் மூலம் மருத்துவமனை பணிப்பாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
