நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள ஆயிரம் தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும், அதற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொல்பொருள் இரு வாரக் காலமும் (Archaeology Fortnight) நாளை (07) முதல் ஆரம்பமாவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் வரலாற்று மற்றும் தொல்பொருள் மதிப்புமிக்க இடங்களை இனங்கண்டு, அவற்றின் அகழ்வாராய்ச்சி, ஆய்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் என புத்தசாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார விவகாரங்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த திட்டத்தின் கீழ் 1,000 தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்படவுள்ள நிலையில், நாளை ஆரம்பமாகும் விசேட இரு வாரக் காலப்பகுதிக்குள் முதற்கட்டமாக அடையாளங்காணப்பட்ட 100 இடங்களில் பணிகள் தொடங்கப்படவுள்ளன.
மேலும், இத்தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், அந்தந்தப் பகுதிகளை மையமாகக் கொண்டு “சமூகப் பாதுகாப்பு குழுக்கள்” அமைக்கப்படவுள்ளன.
இக்குழுக்கள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள், தொல்பொருள் திணைக்களத்தின் தொழில்நுட்ப அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் நேரடித் தலையீட்டின் கீழ் செயல்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
