எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து, சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்களைச் சென்றடையும் நோக்கில் விசேட “நடமாடும் மருத்துவப் பிரிவு” (Mobile Units) திட்டத்தை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு களமிறக்கியுள்ளது.
தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டத்தினால் (NSACP) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முன்னோடித் திட்டம், அதிக மக்கள் தொகை மற்றும் ஆபத்துள்ள நடத்தைகளைக் கொண்ட நபர்களை இலக்காகக் கொண்டு, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை மையப்படுத்தி தற்சமயம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நடமாடும் முகாம்களில் பரிசோதனைகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாகவும், தனிநபர் விருப்பத்தின் பேரில் மிக உறைப்பான இரகசியத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படும். பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டால், அவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகளும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படும்.
இலங்கை எச்.ஐ.வி பரவல் குறைந்த நாடாக இருந்தபோதிலும், அண்மைக்காலமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தேசிய திட்ட விசேட நிபுணர் மருத்துவர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். பல்துணை உறவு கொண்டவர்கள் மற்றும் போதைப்பொருள் ஊசிப் பயன்பாட்டாளர்கள் போன்ற அதிக ஆபத்துள்ள பிரிவினரைச் சென்றடைய உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறந்த வழிமுறை இதுவென அவர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டத்தின் கீழ் நோய் விழிப்புணர்வு, ஆலோசனை, இலவச ஆணுறை விநியோகம், எச்.ஐ.வி/ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்ற பல சேவைகள் வழங்கப்படுகின்றன. 15 மாவட்டங்களைச் சேர்ந்த 120 சமூகப் பணியாளர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விபரங்களுக்கு 0716379192 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
