நாட்டில் தற்போது நடைமுறையிலிருக்கும் QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீட்டு முறையை (Fuel Quota System) தற்போதைக்கு ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை என இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனம் (CPC) திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உலகளாவிய எரிபொருள் சந்தையில் நீடித்து வரும் நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தவிசாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில், “உலகளாவிய ரீதியில் நிலவும் மோதல் போக்குகள் மேலும் தீவிரமடைந்தால், நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு அல்லது நீண்ட வரிசைகள் ஏற்படுவதைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்க்கவுமே இந்த நடைமுறையைத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த QR முறைமையானது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் எரிபொருள் விநியோகத்தை சீரான முறையில் நிர்வகிக்க பெரிதும் உதவுகிறது” என்றார்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால பதற்றநிலைகள் இலங்கையின் தற்போதைய எரிபொருள் விநியோக வலையமைப்பிற்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டிய அவர், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மாற்றங்களை கூட்டுத்தாபனம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.
