2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான மேலதிக வகுப்புகள், பாடநெறி விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகளை நடத்துவதற்கு இன்று (05) நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடையானது புலமைப்பரிசில் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அமுலில் இருக்கும் என்பதுடன், இக்காலப்பகுதியில் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல் அல்லது விளம்பரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சைக்கு எதிர்பார்க்கப்படும் வினாக்கள் அல்லது அதற்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் குறிப்பிட்டு சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது துண்டுப்பிரசுரங்களைக் காட்சிப்படுத்துவது, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் ஊடாக அத்தகைய விளம்பரங்களைச் செய்வது அல்லது அத்தகைய பொருட்களைப் கைவசம் வைத்திருப்பது சட்டவிரோதமானது என பரீட்சைத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி நாடு முழுவதிலும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
