தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உறுப்பினர் ஒருவரை உடனடியாக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை முஸ்லிம் கவுன்சில் (MCSL) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தலைமையிலும், கலாநிதி கே. தவலிங்கம் மற்றும் ரோஹண புஷ்பகுமார ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ள புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் நியமனத்தை வரவேற்பதாக இலங்கை முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என். எம். அமீன் மற்றும் செயலாளர் எம். டி. எம். ரிஸ்வி ஆகியோரின் கையொப்பத்துடன் ஆகஸ்ட் 20, 2026 அன்று ஜனாதிபதியனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
புதிய ஆணைக்குழுவின் நியமனத்தை வரவேற்கும் அதேவேளை, இம்முறை முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் எவரும் இதில் சேர்க்கப்படாமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஒரு தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம் என கவுன்சில் கருதுகிறது.
கடந்த காலங்களில் கலாநிதி எம். எச். ஹஸ்புல்லாஹ், ஏ. எம். நஹியா மற்றும் எம். ஐ. எம். அமீர் போன்ற முக்கிய பிரதிநிதிகள் இவ்வாணைக்குழுவில் உறுப்பினர்களாகப் பணியாற்றி சிறப்பாகப் பங்காற்றியுள்ளனர்.
இலங்கை அரசியலமைப்பின் 95வது உறுப்புரையின்படி எல்லை நிர்ணய ஆணைக்குழுவிற்கு 5 உறுப்பினர்கள் வரை நியமிக்கப்பட முடியும். எனவே, எஞ்சியுள்ள இடங்களை பயன்படுத்தி முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை ஆரம்ப நிலையிலேயே நியமிக்க முடியும்.
தொகுதி எல்லைகளை மறுசீரமைத்தல், மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப அனைத்துச் சமூகங்களுக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தல் மற்றும் வெளிப்படைத்தன்மையைப் பேணுதல் ஆகியவை இந்த ஆணைக்குழுவின் பிரதான பொறுப்புகளாகும். எனவே, ஆணைக்குழுவின் ஆரம்ப கட்டப் பணிகளிலிருந்தே முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் அங்கத்துவம் வகிப்பது மிகவும் அவசியமானது என முஸ்லிம் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
