லங்கா மெட்ரோ டிரான்சிட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பொதுப் போக்குவரத்துச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், அதற்கான துணை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் 1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பங்கு மூலதனத்தை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டில் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் நோக்கத்துடன், இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) துணை நிறுவனமாக லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம் 2025 ஒக்டோபர் 3 அன்று பதிவு செய்யப்பட்டது.
க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 10 தரைமட்ட நுழைவு வசதி கொண்ட (low-floor) பேருந்துகளைப் பயன்படுத்தி, கொழும்பில் ஒரு முன்னோடி நகர்ப்புறப் போக்குவரத்து சேவையை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
அரசாங்கத்தின் தகவலின்படி, இந்த முன்னோடிச் சேவையின் செயல்பாடு அதன் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளை நிரூபித்துள்ளதுடன், பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில், லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனம், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் மேலும் 112 தரைமட்ட நுழைவு வசதி கொண்ட பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இச்சேவை விரிவாக்கத்திற்குத் துணையாக, முழுமையான வசதிகள் கொண்ட மத்தியப் பணிமனை மற்றும் கலங்கம, கடவத்த, ரத்மலானை மற்றும் ஹோமகம ஆகிய இடங்களில் நவீன பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.
