2026ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், பரீட்சைப் புள்ளிகளைக் காரணம் காட்டி சிறுவர்களை உடலிரீதியாகத் தண்டிக்கும் அல்லது உளரீதியாகத் துன்புறுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
பரீட்சைப் பேறுகள் காரணமாகப் பெற்றோரோ அல்லது பாதுகாவலர்களோ சிறுவர்களைத் தண்டிப்பதையோ, அவர்களை உளவியல் ரீதியான அசௌகரியங்களுக்கு உள்ளாக்குவதையோ தவிர்க்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், சிறுவர்களுக்குத் தர்மசங்கடத்தையோ, மன உளைச்சலையோ அல்லது கவலையையோ ஏற்படுத்தும் வகையில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான செய்திகளையோ தகவல்களையோ வெளியிடுவதும், சமூக ஊடகங்களில் பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும் என ஊடக நிறுவனங்களுக்கும் சமூக ஊடகப் பயனாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான செயல்கள் சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களாகக் கருதப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சு, இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராகச் சட்டத்தின் கீழ் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனைகள் தங்குதடையின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
