சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், வெளியுறவு அமைச்சகத்தின் கையாளுதல் மற்றும் தூதரக பொறுப்புக்கூறல் குறித்து கேள்வி எழுப்பி, அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்ட அனோஜனுக்கு, மேல்முறையீட்டிற்குப் பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு “மிகவும் குறைவு” என தூதரகத்தின் சட்ட மதிப்பீடு கூறியபோதிலும், வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அளித்த ஆலோசனையின் பேரிலேயே குடும்பத்தினர் மேல்முறையீடு செய்ததாக MP சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளரின் பெயரிலான கணக்கில் குடும்பத்தினர் ரூ. 1,890,766 வழக்கறிஞர் கட்டணமாகச் செலுத்தியுள்ளனர்.
ஆகஸ்ட் 24, 2026 அன்று மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்த கடிதம் செப்டம்பர் 16, 2026 அன்றே குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வேறு ஒரு வழக்கறிஞர் ஆஜரானதாகவும், அவரது விவரங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கட்டணம் செலுத்தப்பட்ட பிறகும் சரியான சட்டப் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படாதது ஏன் எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ள சாணக்கியன், “ஒரு இலங்கைக் குடிமகனின் உயிர் ஆபத்தில் உள்ளது.
அரசாங்கம் அவசரமாக அனுபவமிக்க சட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற வேண்டும் மற்றும் மிகயுயர் மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி அனோஜனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்.
சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மதநிந்தனை குற்றச்சாட்டிற்காக அனோஜனுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்ற போதிலும், இது குறித்து இன்னும் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
